அனுமன் ராமரையும் லட்சுமணனையும் சுக்ரீவனிடம் அழைத்து வந்தான். அவர்களை சுக்ரீவனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
ராமன் சுக்ரீவனை தன் உடன்பிறந்தவராக எண்ணுவதாக கூறினான்.’ இனி எனது சுகதுக்கங்கள் உனது சுகதுக்கங்கள்’என இருவரும் நட்பு கொண்டனர்.
அனுமன் தீ மூட்ட …அக்னியின் முன் தீயை வலம் வந்து தங்கள் நட்பு நிலைபெற்று இருக்குமென இருவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சுக்ரீவன் ராமனிடம் தான் வாலிக்கு பயந்து ரிஷிமுக பர்வதத்தில் தங்கி இருப்பதாகக் கூறி…வாலியை வதம் செய்து தன் அரசாட்சியையும்,தன் மனைவியையும் மீட்டுத் தருமாறு கேட்டுக்கொண்டான்.ராமரும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார்.
அப்போது சில வானரங்கள் ஒரு துணிமூட்டையை சுக்ரீவனிடம் கொண்டுவந்து கொடுத்தன.மேலும் ஒரு பெண்ணை அரக்கன் ஒருவன் துரத்தி செல்லும்போது, அப்பெண் இம்மூட்டையை கீழே வீசி எறிந்ததாகக் கூறினர்.
சுக்ரீவன் அந்த துணி மூட்டையில் ஆபரணங்கள் இருப்பதை பார்த்தான். ராமர் அவற்றைப் பார்த்து அவை சீதையுடையது தான் என்றார்.மேலும் ‘சீதையை கவர்ந்து சென்றவனை குலத்தோடு அழிப்பேன்’ என்று சபதம் செய்தார்.
வாலியும் சுக்ரீவனும் சகோதரர்கள்.இருவருக்கும் ஒர் அரக்கன் காரணமாக பகை உண்டாயிற்று. வாலியை யாராலும் அழிக்கமுடியாது.வாலியை எதிப்பவர் யாராக இருப்பினும் அவர் பலத்தில் பாதியை இழந்து விடுவர்.எனவே வாலி எதிர்ப்பவர் இல்லாமல் பலசாலியாக இருந்து வந்தான். சுக்ரீவன் வாலியை எதிர்க்க முடியாமல் மறைந்து வாழ்ந்தான். சுக்ரீவனுக்கு இராமன் வாலியை எதிர்த்து போரிடும் வலிமை உடையவரா இல்லையா என்ற ஐயம் ஏற்பட்டது.
அவன் ராமரின் பலத்தை அறிய விரும்பினான்.ராமர் ஒரே அம்பில் 7 மரா மரங்களை துளைத்தார்.மேலும் அவை ஒன்றுக்கொன்று நேராக இல்லை.ஆகவே அதனை துளைத்ததால் சுக்ரீவன் மிகுந்த சந்தோஷப்பட்டான்.இனி நம் எதிரி அழிந்தான் என்று கூக்குரலிட்டான்.
No comments:
Post a Comment